TNEA Engineering Counsellingல் உங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்ந்தெடுப்பது எப்படி?
TNEA Engineering Counsellingல் உங்களுக்கு விருப்பமான கல்லூரியை தேர்ந்தெடுப்பது எப்படி? | How to Select College in TNEA Engineering Counselling
தமிழகத்தில் பொறியியல் படிக்க மாணவர்களிடையே மீண்டும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் டாப் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை பிடிக்க கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது. இந்த நிலையில், உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு எந்த ரவுண்ட் கவுன்சலிங் வரும்? நீங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற தகவல்களை இப்போது பார்ப்போம்.

பொறியியல் படிப்புகளுக்கான ரேங்க் பட்டியல் வருகின்ற ஆகஸ்ட் 16 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டவுன் உங்களுக்கு எந்த ரவுண்ட் கவுன்சலிங் வரும் என்பது தெரிந்துவிடும். முதல் ரவுண்ட்க்கு 15000க்கும் அதிகமான மாணவர்கள் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்த ரவுண்ட்களுக்கு அதிகமான எண்ணிக்கை மாணவர்கள் அழைக்கப்படுவர்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் சாய்ஸ் ஃபில்லிங் எனப்படும் கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்படும். இந்த சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறை கவுன்சலிங்கில் மிக முக்கியமான ஒன்று. இது தான் நீங்கள் படிக்க கூடிய கல்லூரியை முடிவு செய்யக்கூடியது. இவை முற்றிலும் உங்கள் விருப்ப தெரிவாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் அசாதாரணமாக செயல்பட்டால் முக்கிய கல்லூரிகளில் நீங்கள் விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காமல் போகலாம். எனவே கவனமுடன் செயல்படுங்கள்.
இந்த சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறையை நீங்கள் வீட்டிலிருந்தோ அல்லது கவுன்சலிங் உதவி மையங்களிலோ செய்யலாம். இதற்கு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உங்களுடன் இருப்பது அவசியம். ஏனெனில் அதற்கு ஓ.டி.பி வரும்.
அடுத்ததாக உங்கள் கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு எந்தெந்த கல்லூரிகளில் எந்தெந்த பாடப்பிரிவுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். இது மிகவும் அவசியமான செயல்முறை எனவே கூடுதல் கவனமுடன் செயல்படுங்கள்.
இவ்வாறு கல்லூரிகளை பட்டியலிடும்போது, செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், கல்லூரி எண் (College code number) குறித்துக் கொள்வதாகும். அந்தந்த கல்லூரிக்கு நேராக கல்லூரி எண்ணை சரியாக குறித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு பெயரிலான கல்லூரிகள் உள்ளதால், குழப்பத்தைத் தவிர்க்க கல்லூரி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு கல்லூரிகளை பட்டியலிட்டப் பிறகு அதே வரிசையில், இணையதளத்தில் முன்னுரிமை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். இந்த செயல்முறைக்கு உங்களுக்கு மூன்று நாட்கள் வழங்கப்படும். கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்க முன்கூட்டியே செய்து விடுங்கள்.
மூன்று நாள் முடிந்த பிறகு 4 ஆவது நாள் உங்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த ஒதுக்கீடு உங்களுக்கு திருப்தியாக இருந்தால், நீங்கள் ஒதுக்கீட்டை உறுதி (Accept & Join) செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். எனவே கண்டிப்பாக ஒதுக்கீட்டை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இவ்வாறு ஒதுக்கீட்டை உறுதி செய்த பின்னர் நீங்கள், ஒதுக்கப்பட்ட கல்லூரிக்குச் சென்று 7 நாட்களுக்குள் கல்வி கட்டணங்களை செலுத்தி, ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் உங்களுக்கான ஒதுக்கீடு ரத்தாகி விடும்.
அடுத்ததாக ஏற்றுக்கொள்கிறேன் மற்றும் மாற்ற விரும்புகிறேன் (Accept and Request for Upward movement) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், நீங்கள் டி.எப்.சி மையங்களுக்குச் சென்று 7 நாட்களுக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக, ஏற்றுக்கொள்ளவில்லை மற்றும் மாற்ற விரும்புகிறேன் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், நீங்கள் டி.எப்.சி மையங்களுக்குச் சென்று 7 நாட்களுக்குள் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
நான்காவதாக நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
ஐந்தாவதாக நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் வேறு படிப்புக்குச் செல்ல விரும்புகிறேன் என்பதை தேர்ந்தெடுக்கலாம்.
ஆறாவது ஆப்ஷன், உங்களுக்கு தற்காலிக ஓதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லையென்றால், அடுத்த சுற்றில் தேர்ந்தெடுக்க தயாராகிறேன் என்பதை கிளிக் செய்யலாம்.










